திருப்பூரை அடுத்த முதலிபாளையம் பகுதியில் பொதுமக்களைத் தாக்கிய காவலர் தற்காலிகமாக வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவர் செல்வகுமார், இவர் கடந்த வியாழக்கிழமை ஊத்துக்குளி காவல் நிலையத்துக்கு உள்பட்ட முதலிபாளையம் பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு அமர்ந்திருத்த 3 பேரை லத்தியால் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட காவலர் மீது ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில் ஊத்துக்குளி காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் விசாரணை நடத்தியுள்ளார். இதில் பொதுமக்களை, காவலர் செல்வகுமார் தாக்கியது தெரியவந்தது.
இதன் பேரில் காவலர் செல்வகுமாரை தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.