மே மாதத்திற்கும் ரேஷன் பொருள்கள் இலவசம்
தமிழகத்தில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மே மாதமும் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளா
தமிழகத்தில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மே மாதமும் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் விலையில்லா பொருள்கள், இரண்டாவது முறையாக ரூ. 1000 வழங்கப்படுவது உள்ளிட்ட நிவாரணங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
"ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால், தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.
கட்டடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக 1,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்.
பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்."