வீடு தேடிச்சென்று சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர்கள்
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மதுரை மாநகர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் புதன்கிழமை வரை தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மதுரை மாநகர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் புதன்கிழமை வரை தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மருந்துக் கடைகள் தவிர பிற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மதுரை மாநகர பகுதி யில் இரண்டாவது நாளாக சாலைகள் நடமாட்டம் இன்றி வெறச்சோடின.
இந்நிலையில், கால்நடை மருத்துவர்கள், வீட்டுக்கே சென்று சுகவீனம் அடைந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
மதுரையை அடுத்த முனியாண்டிபுரத்தைச் சேர்ந்தவரின் பசு மாடு ஜீரணக் கோளாறு காரணமாக சுகவீனம் அடைந்தது.
எழுந்து நடமாட முடியவில்லை. அதையடுத்து கால்நடை பராமரிப்புத் துறையின் அவசரகால தொடர்பு எண்ணுக்கு (1962) தொடர்பு கொண்டு பசுவின் உரிமையாளர் திங்கள்கிழமை தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அவரது இருப்பிடத்துக்கு அருகே உள்ள விளாச்சேரி கால்நடை மருந்தக மருத்துவருக்கு கட்டுப்பாட்டு அறையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து கால்நடை மருத்துவர் சிவக்குமார் சுகவீனம் அடைந்த பசுவுக்கு இருப்பிடத்துக்கே சென்று சிகிச்சை அளித்தார்.
ஊரடங்கு அவசரகால தொடர்பு எண்கள் குறித்த விவரம் தினமணியில் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இதைப் பார்த்து கால்நடை உரிமையாளர்கள் பலரும் தொடர்பு கொண்டு சிகிச்சை உதவி பெற்றதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.