கொடைக்கானலில் தொடர் மழை: பீன்ஸ் செடியில் மஞ்சள் நோய் தாக்குதல்
கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் பீன்ஸ் பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் பீன்ஸ் பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கொடைக்கானலின் சுற்றுவட்டாரப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை, பூண்டி, வில்பட்டி, மாட்டுப்பட்டி, செண்பகனுர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பீன்ஸ் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 15நாட்களுக்கு மேலாக கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்கியுள்ளது. இதனால் பீன்ஸ் காய்கள் விளைச்சலின்றி காணப்படுகின்றன. பயிர்கள் சேதமடைந்ததால் இவற்றை பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது, “கொடைக்கானல் பகுதியில் தற்போது பீன்ஸ் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்கி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. செடிகளை ஒரு ஏக்கருக்கு ரூ 25 ஆயிரம் செலவு செய்து உரமிட்டு பூச்சி மருந்து தெளித்துப் பாதுகாத்து வந்தோம். ஆனால் தற்போது மஞ்சள் நோய் தாக்கத்தினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளோம்.” எனத் தெரிவித்தனர்.
எனவே கொடைக்கானலிலுள்ள தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் சேதமடைந்த பீன்ஸ் பயிர்களை பார்வையிட்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.