தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் இணையவழியில் ஆக. 17 ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கப்படவுள்ளன என்றார் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன்.
இப்பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியது:
கரோனா பொது முடக்கம் காரணமாக அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பணியாற்றும் முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இணையவழியாக 25 உரைத்தொடர்களும், கருத்தரங்கங்களும் நடத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கவாழ் தமிழர்களுக்குத் தமிழ்க் கற்பிக்கும் தன்னார்வலத் தமிழ்ப் பயிற்றுநர்களுக்குத் தமிழ் வளர் மையம் வழியாக 2 மாதத் தமிழ்க் கல்விப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்ப் பண்பாட்டு மையத்தில் 1,000-க்கும் அதிகமான மாணவர்களைச் சேர்த்துள்ளோம். ஆசிரியர்கள் இயன்ற அளவு மாணவர்களுடன் தொடர்பு கொண்டு இணையவழியாகப் பாடங்கள் நடத்துகின்றனர். முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுகள் இணையவழியாக நடைபெறுகின்றன.
அரசு வழிகாட்டுதலின்படி தொலைநிலைக்கல்வி உள்பட, இறுதியாண்டு தவிர்த்து பிற பருவ மற்றும் ஆண்டு அகமுகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. நிகழ் கல்வியாண்டுக்கான வகுப்புகள் இணையவழியாக ஆக. 17-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளன.
முதுநிலை, ஆய்வியல் நிறைஞர் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் முதல் முறையாக இணையவழியாகப் பெறப்பட்டு வருகின்றன. பெரும் எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர். நிகழாண்டு சேர்க்கை நிறைவடைந்தவுடன் தேசிய கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியல் அமைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் பதிவு செய்து, அதில் ஒரு இடத்தைப் பெற முடியும் என நம்புகிறோம் என்றார் துணைவேந்தர்.
விழாவில் பதிவாளர் (பொ) கு. சின்னப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.