மதுரை: மணல் கடத்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் காட்டமாகக் கூறியுள்ளனர்.
மணல் கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடும் எச்சரிக்கையை முன்வைத்தனர்.
அதாவது, மணல் கடத்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை தொடர்ந்து சோதிக்க வேண்டாம், அவ்வாறு தொடர்ந்தால், தமிழக தலைமைச் செயலாளரை காணொலி காட்சி வாயிலாக விசாரிக்க வேண்டியது வரும்.
தமிழக அரசின் அரசாணையின்படி மணல் குவாரிகள் அரசால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உபரி மண் எடுக்க, சவுடு மண் எடுக்க என்று உரிமம் வழங்கி விட்டு, மணல் கடத்தலை அரசே ஊக்குவிக்கிறது. அரசின் பதில் மனுக்களில் இருக்கும் திட்டங்கள், அரசாணைகள் அனைத்தும்பெயரளவில் மட்டுமே உள்ளது.
மணல் கடத்தலுக்கு உதவும் அரசு அதிகாரிகள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.