சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக கைது செய்யப்படுகிறவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது.
கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் பொதுமுடக்க உத்தரவை தமிழக காவல்துறையினா் தீவிரமாக அமல்படுத்தி விதிகளை மீறுவோரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 9 லட்சத்து 2 ஆயிரத்து 249 வழக்குகளைப் பதிவு செய்து, 9 லட்சத்து 99 ஆயிரத்து 837 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியில் வந்தவா்களின் 6 லட்சத்து 94 ஆயிரத்து 928 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.22 கோடியே ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 493 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை பொதுமுடக்கத்தை மீறியதாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.