முகப்பு
தமிழ்நாடு

கரோனா விதிமுறைகளை பின்பற்றாதோருக்கு அபராதம்: அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட  வழக்கை  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
Penalty for non-compliance with Corona rules: Dismissal of case seeking cancellation of notice
பகிர்:

சென்னை: கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட  வழக்கை  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை ராமாபுரத்தை சேர்ந்த 77 வயதான ஆர்.முத்துக்கிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கில், கரோனா பொதுமுடக்கம் கடுமையாக்கப்பட்டு பின்னர் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தளர்வுகளை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதற்காக, கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அபராதம் விதிக்கும் நடைமுறையை தமிழக அரசு அறிவித்து, அதனை கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டுள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பின்படி,  தனிமைப்படுத்தும் விதிகளை மீறுதல், பொது இடத்தில் முகக்கவசம் அணியாமல் இருப்பது, தனி மனித இடைவெளியை பின்பற்றாதது, பொதுவெளியில் எச்சில் துப்புதல், முடிதிருத்தகம், ஸ்பா, ஜிம் ஆகியவற்றிற்கான விதிகளை பின்பற்றாதது குற்றம் எனவும், அதற்காக ரூ. 200  முதல்  ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க புதிய அறிவிப்பு வகை செய்கிறது. கடந்த 1939-ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை, சுகாதாரத்துறை ஆகியோருக்கு அதிகாரம் இல்லாததால், அவர்களுக்கு அதிகாரம் அளித்து அந்த சட்டத்தில் திருத்தமும் (பிரிவு 76) (2) கொண்டுவரப்பட்டது. எனவே அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழக அரசு தரப்பில், கரோனா கட்டுப்பாடுகளை மீறினால் குற்றம் என அறிவித்து ஏற்கனவே பல அறிவிப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யாமல் தொடர்ந்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதனையடுத்து அரசு தரப்பு வாதத்தை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு,  அபராதம் விதிப்பது தொடர்பாக தமிழக அரசின் இந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →