"கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் பழைய அட்டைகளைப் பயன்படுத்தலாம்'
அரசுப் பேருந்துகளில் செல்லும் கல்லூரி மாணவர்கள், இலவசப் பேருந்து பழைய அடையாள அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கரூர்: அரசுப் பேருந்துகளில் செல்லும் கல்லூரி மாணவர்கள், இலவசப் பேருந்து பழைய அடையாள அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி அருகேயுள்ள அய்யம்பாளையம் பகுதியில் புகழூர் வாய்க்காலில் டிஎன்பிஎல் ஆலை பகுதியில் திங்கள்கிழமை மாலை ஆய்வு செய்த அவர் மேலும் தெரிவித்தது: டிஎன்பிஎல் காகித ஆலையின் கழிவுநீர் மழைக் காலங்களில் புகழூர் வாய்க்காலில் கலப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. அதுசம்பந்தமாக ஆலையின் அதிகாரிகளை வரவழைத்து இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இப்பகுதி விவசாயிகள் வழக்குகள் தொடுத்து நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளனர்.
இனியும் இதே நிலை தொடர்ந்தால் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்றால் இலவசப் பேருந்து அட்டையை வழங்க இயலவில்லை. தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இலவசப் பேருந்து பயண பழைய அடையாள அட்டையே செல்லுபடியாகும். விரைவில் அரசின் அனுமதியோடு மணல் அள்ள அனுமதி பெற்றுத்தருவோம் என்றார்.