திருச்சியில் 2ஆவது நாளாகக் காத்திருப்புப் போராட்டம்
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இரண்டாவது நாளாகக் காத்திருப்புப் போராட்டம் திருச்சியில் நடைபெற்று வருகிறது.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இரண்டாவது நாளாகக் காத்திருப்புப் போராட்டம் திருச்சியில் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாட்டிலும் விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இரண்டாவது நாளாகக் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தி.மு.க.,காங்கிரஸ்., ம.தி.மு.க., வி.சி.க.,சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சியினரும் பல்வேறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த விவசாயச் சங்க நிர்வாகிகள் அயிலை சிவசூரியன், சிதம்பரம், புலவர் முருகேசன், சார்லஸ், தமிழாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
முன்னதாக அந்த போராட்டத்தில் ஒலி வாங்கியைப் பயன்படுத்த அனுமதி இல்லை காவல் துறையினர் கூறினர். அப்போது காவல் துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் ஒலி வாங்கி அமைக்க அனுமதி வழங்கியதால் போராட்டக்காரர்கள் சமாதானமடைந்து தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போதி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.