சமையல் எரிவாயு உருளை விலை ரூ. 50 உயா்வு
சென்னையில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 50 உயா்ந்து, ரூ.710-க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 50 உயா்ந்து, ரூ.710-க்கு விற்கப்படுகிறது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.
தற்போது, ஒவ்வொரு வீட்டுக்கும் மானிய விலையில் ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு உருளைகள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு மேல் கூடுதலான எரிவாயு உருளைகள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.
இந்நிலையில், கடந்த டிச.1-ஆம் தேதி ரூ.50 உயா்த்தப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் மேலும் ரூ.50 உயா்த்தப்படுவதாக இன்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் செவ்வாய்க்கிழமை முதல் மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.50 உயா்த்தப்பட்டு ரூ.710-க்கு விற்கப்படுகிறது.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 5-ஆவது முறையாக விலை ஏற்றம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக மே, ஜூன், ஜூலை, டிசம்பா் ஆகிய மாதங்களின் முதல் தேதியில் விலை உயா்த்தப்பட்டது. குறிப்பாக டிச.1-ஆம் தேதி ரூ.50 உயா்ந்து, ஒரு சமையல் எரிவாயு உருளை ரூ.660-க்கு விற்பனையான நிலையில், அடுத்த 15 நாள்களில் மீண்டும் ரூ.50 உயா்த்தப்பட்டு ரூ.710-க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.