ஈரோட்டில் 3 ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில் 3 ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்ட த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்று 21 - வது நாளாக நீடித்து வருகிறது.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தில்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நேற்று முதல் ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் காலி இடத்தில் கடந்த 14 ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
அவர்களது போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு இந்திய விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் துளசிமணி, சுப்பு, பொன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் முத்துசாமி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஈ.பி.ரவி, கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்