அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து: கே.ஏ.செங்கோட்டையன்
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு: அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் பார்க்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முழு உருவ வெண்கலச் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநகர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் முழு உருவ எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் திறப்பு விழா இன்று காலை நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான கே.வி. ராமலிங்கம் தலைமை தாங்கினார். விழாவில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு வரவேற்றுப் பேசினார். எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாச்சலம், சிவசுப்பிரமணி, ராஜா என்ற ராஜாகிருஷ்ணன், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை முன்னிலை வகித்தனர்.
பன்னீர் செல்வம் பார்க்கில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா முழு உருவ வெண்கலச் சிலையை தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
கட்சி அலுவலகத்தில் உள்ள மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். சிலையை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து கட்சி அலுவலகம், கூட்ட அரங்கு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தினை கோவை மண்டல தகவல் தொழில்நுட்பச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
இதையடுத்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே. சி.கருப்பணன் 80 அடி உயரக் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலகிருஷ்ணன், கிட்டுசாமி, மாவட்ட அவைத் தலைவர் இராமசாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீசன், தங்கமுத்து, ஒன்றியச் செயலாளர் பூவேந்திரகுமார், மாணவரணி மாவட்டச் செயலாளர் ரத்தன் பிரித்வி, மாணவரணி மாவட்ட இணைச் செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர்கள் வீரக்குமார், பாவை அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதிச் செயலாளர் கேசவமூர்த்தி நன்றி கூறினார்.
முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் இந்த அரசை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக வழி நடத்தி வருகிறார். தமிழகத்தில் குடிமராமத்து என சிறப்பான திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். நிவர் புயலின் போது சிறப்பாக செயல்பட்டு பல உயிர்களை காத்தார். சிலர் கனவு காண்கிறார்கள் அது பலிக்காது. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மீண்டும் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்றார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இல்லை. விருப்பமுள்ள தனியார் பள்ளிகள் ஆன்லைனில் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம். இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை பெற்று முதல்வர் அறிவிப்பார்.
அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதி செய்து கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகிறது. 9 ஆம் வகுப்பு வரையிலும் 50 சதவீத பாடம், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 65 சதவீதம் அளவுக்கு பாடம் நடத்தப்படும் என்றார்.