விவசாய நிலங்களுக்கான இழப்பீட்டை அரசு உயர்த்தி வழங்கக் கோரி சங்ககிரியில் விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம்
விவசாய நிலங்களுக்கான இழப்பீட்டை அரசு உயர்த்தி வழங்கக் கோரி சங்ககிரியில் விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சங்ககிரி: சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பவர் கீரிட் நிறுனத்தின் சார்பில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு சந்தை விலையை விட இழப்பீட்டுத் தொகையை அரசு உயர்த்தி வழங்கக் கோரி ஒருங்கிணைந்த விவசாயிகள் அமைப்புகளின் சார்பில் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகி பி.பெருமாள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது:
திருப்பூர் மாவட்டம் புகளூர் முதல் சத்தீஸ்கர் ரெய்க்கார் வரை 800 கிலோவாட் மின் பாதை உயர் மின் கோபுரங்கள் பவர் கீரிட் நிறுவனத்தின் சார்பில் சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பைவிட மிக குறைந்தபட்ச விலைகளை அரசு நிர்ணயம் செய்துள்ளன.
அந்த இழப்பீட்டு தொகையினை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். அரசு நிர்ணயித்துள்ள இழப்பீட்டுத் தொகையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு சந்தைவிலையை விட அதிகபட்ச விலையை நிர்ணயித்து வழங்க அரசின் கவனத்தை ஈர்க்க கோரிக்கை மனுக்களை அளிப்பது குறித்து விளக்கிப் பேசினார்.
இக்கூட்டத்திற்கு முன்னதாக சங்ககிரி திருச்செங்கோடு பிரிவு சாலை பகுதியில் தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் உருவப் படத்திற்கு மலர் மரியாதை செலுத்திய நிர்வாகிகள் மெழுகுவர்த்திகள் ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
விவசாயகள் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலர் ஏ.ராமூர்த்தி, சங்ககிரி வட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள், சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.