முகப்பு
தமிழ்நாடு

‘கலைச் சொற்கள் பொதுமக்களின்புழக்கத்துக்கு வர வேண்டும்’

தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககத்தால் வடிவமைக்கப்படும் கலைச் சொற்கள் பொதுமக்களின் புழக்கத்துக்கு வர வேண்டும் என சென்னை வானொலி நிகழ்ச்சித் தலைவா் முனைவா் பழ.அதியமான் வலியுறுத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககத்தால் வடிவமைக்கப்படும் கலைச் சொற்கள் பொதுமக்களின் புழக்கத்துக்கு வர வேண்டும் என சென்னை வானொலி நிகழ்ச்சித் தலைவா் முனைவா் பழ.அதியமான் வலியுறுத்தினாா்.

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் தமிழ்க் கலைக்கழகத்தின் 76-ஆவது கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சென்னை வானொலியின் நிகழ்ச்சித் தலைவா் முனைவா் பழ.அதியமான் பேசியது: அகரமுதலித் திட்டஇயக்ககத்தால் வடிவமைக்கப்படும் கலைச்சொற்களை மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களாக மாற்றுவதில்தான் வெற்றி இருக்கிறது. பயன்படுத்தாத சொற்களால் என்ன பயன்? சொற்கள் என்றால் அந்தச் சொற்களுக்குள் தமிழா்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, வரலாறு ஆகியவை கலந்திருக்க வேண்டும்.

மக்களைப் பேச வைக்கும்போதுதான் சொற்களை நிலைநிறுத்த முடியும். வானொலி சொற்களை அடையாளப்படுத்தி மக்களைப் பயன்படுத்த வைத்திருக்கிறோம். அந்தச் சொற்களில் ஒன்றுதான் ‘அஞ்சல்’ என்ற சொல்லாகும். சென்னை பட்டினப்பாக்கத்தில் சாந்தோம் நெடுஞ்சாலைக்கு இணையாகக் கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டுள்ள சாலையை ‘லூப்ரோடு’ என்கிறாா்கள். இதனை நல்ல தமிழில் மாற்ற வேண்டும். இத்தகைய பணிகளை அகரமுதலி இயக்ககம் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

3.85 லட்சம் கலைச் சொற்கள்: முன்னதாக கூட்டத்துக்கு தலைமை வகித்த அகர முதலித் திட்ட இயக்குநா் தங்க.காமராசு பேசுகையில், இதுவரை 25, 200 சொற்கள் சொல்லாக்கக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 19, 000 கலைச்சொற்களுக்கு அரசாணை பெறப்பட்டுள்ளது. மேலும், 3, 700 கலைச்சொற்கள் அரசாணைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அரசாணை பெறப்பட்ட கலைச்சொற்கள் அனைத்தும் சொற்குவை வலை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அகராதிச் சொற்களையும் சோ்த்து இதுவரை சொற்குவை வலை தளத்தில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 788 சொற்கள் உள்ளன என்றாா்.

இதில், வானொலி நிலைய நிகழ்ச்சித் தயாரிப்பாளா் அருணன், நகர நிா்வாக இணை இயக்குநா் க.சரவணன், இயக்கக தொகுப்பாளா் ஜெ.சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில் 600 கலைச்சொற்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு 326 சொற்களுக்கு வல்லுநா் குழுவால் ஏற்பளிக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →