வாழ்க்கை முறை மாற்றமே நோய்களுக்கு காரணமாகி விட்டது: காஞ்சிபுரம் ஆட்சியர்
வாழ்க்கை முறை மாற்றங்களும், தேவையற்ற உணவுகளைச் சாப்பிடுவதும் நோய்களுக்கு காரணமாகி இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் புதன்கிழமை பேசினார்.
வாழ்க்கை முறை மாற்றங்களும், தேவையற்ற உணவுகளைச் சாப்பிடுவதும் நோய்களுக்கு காரணமாகி இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் புதன்கிழமை பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் சரியான உணவை உட்கொள்ளும் இயக்கத்தைக் குத்து விளக்கேற்றித் தொடக்கி வைத்து ஆட்சியர் பேசியது..
வாழ்க்கை முறை மாற்றங்களால் துரித உணவுகளையும், ஒவ்வாத உணவுகளையும் சாப்பிடுவது அதிகரித்திருக்கிறது. இதனால் மனிதர்கள் பலரும் நோய்களுக்கு ஆளாகி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். உணவில் சர்க்கரை, உப்பு, எண்ணெய் ஆகியனவற்றைக் குறைத்துக் கொள்வது நல்லது.
பழ வகைகளையும், கீரை வகைகளையும் அதிகமாக சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். குழந்தைகள் தொலைக்காட்சி, செல்போன் ஆகியனவற்றைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவதையும், துரித உணவுகளை சாப்பிடுவதையும் பெற்றோர்கள் தடுத்து எடுத்துச் சொல்லி அதனால் ஏற்படும் தீங்கை விளக்கிட வேண்டும். பாலித்தீன், பிளாஸ்டிக் பைகள் ஆகியனவற்றை உபயோகிக்காமல் வாழை இலை, பாக்குமட்டைத்தட்டு, மந்தாரை இலை ஆகியனவற்றில் சாப்பிடுவது சிறந்தது.
உணவே மருந்து, மருந்தே உணவு என்று வாழ்ந்து கொண்டிருந்த நாம் வாழ்க்கை முறை மாற்றங்களால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறோம். ஆரோக்கியமான சமுதாயம் உருவாகிட நாம் ஒவ்வொருவரும் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் பேசினார்.
விழாவில் சரியான உணவை உட்கொள்ளும் இயக்கத்தின் குறுந்தகடுகள், நாட்டுப்புறப் பாடல்கள், சமூகவலைத்தள பக்கங்கள் ஆகியனவற்றையும் ஆட்சியர் வெளியிட்டார். நடமாடும் உணவுப் பாதுகாப்பு வாகனத்தையும் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். விழாவிற்கு ஏ.டி.எஸ்.பி.வி.பொன்ராமு, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவர் சற்குணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர்.அனுராதா வரவேற்றார்.
இயக்கத்தின் முத்திரையையும்,சமூக வலைத்தளப் பக்க மாதிரியையும் ஆட்சியர் வெளியிட அதனை நடிகை ரோகிணி பெற்றுக் கொண்டார். விழாவில் நாட்டுப்புறப் பாடல் கலைஞர்கள் செந்தில் மற்றும் ராஜலெட்சுமி, சர்வதேச சமையல் கலை நிபுணர் ஸ்ரீபாலா ஆகியோர் உட்பட வணிகர்கள், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.