சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி உத்தரவாதம்
சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
சென்னை: சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சியின் 5-ஆது மண்டலத்தில் உள்ள 5,574 சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ருக்மாங்கதன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் ,ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மண்டல அதிகாரி ராம் பிரதீபன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆஜராகினர். விதிமீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, 5-ஆவது மண்டலத்தைப் போல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அரசுத் தரப்பில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்வதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.