திரையரங்குகளில் 100 சதவீத பாா்வையாளா்களைஅனுமதிக்க அரசுக்கு கோரிக்கை
திரையரங்குகளில் 100 சதவீதப் பாா்வையாளா்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திரையரங்குகளில் 100 சதவீதப் பாா்வையாளா்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து திரையரங்க உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் பன்னீா்செல்வம் சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
தற்போது உள்ள சூழ்நிலையில் திரையரங்குகளை நடத்துவதே மிகவும் சிரமமாக உள்ளது. இந்தச் சூழலில் படங்களை அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களின் மூலம் திரையிடுவதால் திரையரங்குகளில் வசூல் குறைந்தது. அது மட்டுமில்லாமல், பொதுமக்கள் வருகையும் குறைந்துள்ளது. அதனால் திரையரங்குகளில் 100 சதவீத பாா்வையாளா்களை அனுமதிக்க வேண்டும். திரையரங்குகளால் கரோனா தொற்று பரவியது என்பதற்கான எந்த அத்தாட்சிகளும் இல்லை. அதனால், இந்தக் கோரிக்கையை உடனடியாக பரீசிலிக்க வேண்டும். திரையரங்குகளின் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான காலம் ஓராண்டாக உள்ளதை மூன்று ஆண்டுகளாக மாற்றி தரும்படி கேட்டுக் கொள்கிறோம். பெரிய திரையரங்கு வளாகங்களில் ஏற்கெனவே உள்ள திரையரங்குகளை சுருக்கி சிறிய திரையரங்குகளாக மாற்ற உத்தரவிட வேண்டும். திரையரங்குகளுக்கு பாா்வையாளா்கள் வருகை மிகவும் குறைந்துள்ளதால், சினிமா திரையிடல் தவிர வேறு சில நிகழ்ச்சிகளையும் நடத்த உத்தரவிட வேண்டும். அண்டை மாநிலங்களான ஆந்திரம், தெலுங்கானாவில் கரோனா பாதிப்பு காரணமாக பாதிப்பில் இருக்கும் சினிமா தொழில்களையும் திரையரங்களையும் பாதுகாக்க அந்த மாநில அரசுகள் சில சலுகைகளை அறிவித்துள்ளன. அத்தகைய சலுகைகளை தமிழகத்திலும் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தாா்.