தமிழகத்தில் 2020-21-ஆம் ஆண்டு ஒரு லட்சம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் ரூ.20 கோடியில் வழங்கப்படவுள்ளன.
இது குறித்து நிதியமைச்சா் ஓ.பன்னீா் செல்வம், நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 17 அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியங்களும் தொடா்ந்து சிறப்பாக செயல்பட்டு கடந்த ஆண்டில் 2.63 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 4.32 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.241.94 கோடி உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.149.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ரூ.5.44 கோடி செலவில் 25 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு காலணிகள், பாதுகாப்பு தலைக்கவசங்கள், பிரதிபலிப்பு ஜாக்கெட்டுகள், கையுறைகள், பாதுகாப்பு கண்ணாடிகளை அரசு வழங்கியுள்ளது. 2020-2021-ஆம் நிதியாண்டில் ஒரு லட்சம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் ரூ.20 கோடியில் வழங்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.