சென்னை: திட்டமிட்டபடி நாளை சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்துவதை எதிர்த்து இஸ்லாமிய சங்கங்கள் அடங்கிய கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
தங்களது போராட்டத்தின் ஒரு பகுதியாக புதனன்று சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாகக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து வாராஹி என்பவர் தொடுத்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மார்ச் 11-ஆம் தேதி வரை அத்தகைய முற்றுகைப் போராட்டங்களுக்கு தடை விதித்து செவ்வாய் மாலை உத்தரவிட்டது.
இந்நிலையில் திட்டமிட்டபடி நாளை சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்லாமிய மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர் காஜா முகைதீன் தெரிவித்ததாவது:
நாங்கள் திட்டமிட்டபடி நாளை சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும். வாராஹி தொடுத்த வழக்கில் எங்களை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்பதால் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு எங்களுக்குப் பொருந்தாது. தேசியக்கொடி ஏந்தி அமைதியான முறையில் சட்டத்தின் வரம்பு மீறாத வகையில் எங்களது போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.