முகப்பு
தமிழ்நாடு

அவினாசி விபத்தில் சிக்கியவர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாத சோகம்

இன்று ஒரு கருப்பு வியாழன் என்று சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

Updated On : 20 பிப்ரவரி, 2020 at 2:29 PM
பகிர்:


திருவனந்தபுரம்: இன்று ஒரு கருப்பு வியாழன் என்று சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

அதில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கேரள அரசுப் பேருந்தும், கண்டெய்னர் லாரியும் மோதியதில் 21 பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் கேரள மக்கள்.

கோவையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவிநாசிப் பகுதியில் நடந்த இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

Advertisement

விபத்து குறித்து பாலக்காடு காவல்துறை கண்காணிப்பாளர் சிவ விக்ரம் கூறுகையில், இரண்டு வாகனங்களுமே மிக வேகமாக வந்த போது நடந்த விபத்து இது. கண்டெய்னர் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. ஓட்டுநர் கண்ணயர்ந்து விட்டாரா அல்லது டயர் வெடித்துவிட்டதா என்று தெரியவில்லை.  தவறான பாதையில் லாரி நுழைந்து, எதிரே வந்த கேஎஸ்ஆர்டிசி பேருந்து மீது வேகமாக மோதியது. விபத்தில் பலியான மற்றும் காயமடைந்தவர்களின் பெயர் மற்றும் விவரங்களை சேகரித்து வருகிறோம் என்றார்.

இந்த பேருந்தில் இருந்த பயணிகள் பெரும்பாலானோர் பாலக்காடு, திரிசூர், எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இந்த விபத்தில் சக பயணிகளை கண் எதிரே இழந்து, நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள், கோர விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.  

எர்ணாகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கரீஷ்மா, விபத்துக்குள்ளான பேருந்தின் இடது பக்கத்தில் அமர்ந்திருந்தார். விபத்து நடக்கும் போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாகக் கூறுகிறார்.

அதிகாலை 3.15 மணியளவில் இந்த விபத்து நேரிட்டது. பயங்கர சத்தம் கேட்டு கண் விழித்தபோது, பேருந்து நொறுங்கியிருந்தது. பலரும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள் என்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த மற்றொரு பயணி ஆலன், விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிப்பதாகக் கூறுகிறார். எனக்கு சிறிய காயங்கள்தான். என் நண்பருக்குத்தான் மூக்கு உடைந்துவிட்டது. அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறேன் என்றார்.

ஜெமின் ஜார்ஜ் என்ற பயணி கூறுகையில், எனது உதடு பிளந்து கொண்டது. தலையில் அடிபட்டு 10 தையல்கள் போட்டுள்ளார்கள் என்கிறார் வலி தந்த வேதனையோடு.

என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஓட்டுநரின் இருக்கைக்குப் பின் இருக்கையில்தான் இருந்தேன். ஆனால் உறங்கிக் கொண்டிருந்தேன். காயமடைந்து கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளேன் என்கிறார்.

விபத்து நடந்த போது உதவி செய்யக் கூட சாலையில் வேறு வாகனங்கள் அவ்வளவாக இல்லை, நான் பேருந்தின் வலது பக்கத்தில்தான் இருந்தேன். பேருந்து முற்றிலும் சிதைந்துவிட்டது என்கிறார் அதிர்ச்சி மாறாமல்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.