பரங்கிப்பேட்டையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
தில்லியில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த இளைஞரின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
தில்லியில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த இளைஞரின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மதீனா நகரைச் சேர்ந்தவர் சுல்தான் மகன் அப்துல் சமது(27). இவர் கடந்த ஆண்டு திடீரென மாயமானார். தீவிரவாத நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பதாக கருதி இவரை போலீசார் தேடி வந்த நிலையில், கொலை வழக்கு குற்றவாளிகள் ஒருவருடன் அப்துல் சமது செல்போனில் பேசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கடந்த மாதம் பரங்கிப்பேட்டைக்கு வந்து அப்துல் சமது குறித்து விசாரணை நடத்திச் சென்றனர்.
Advertisement
அப்போது அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பரங்கிப்பேட்டை முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் அப்துல் சமது புதுதில்லியில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சென்னையில் இருந்து 4 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் இன்று காலை பரங்கிப்பேட்டைக்கு வந்தனர். பின்னர் மதினா நகரில் உள்ள அப்துல் சமது வீட்டிற்குச் சென்றனர். அங்கு சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸாரின் பாதுகாப்புடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அப்துல் சமதுவின் வீட்டில் காலை 6 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், அப்துல் சமதுவிற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணை நடைபெற்று வருகிறது. பரங்கிப்பேட்டையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.