மற்ற மாநிலங்களில் இலவச அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் இலவச அரிசி விநியோகத்தை தடுத்து நிறுத்துவது ஏன்? என முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று புதுச்சேரியில்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் நாராயணசாமி, 'துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். புதுச்சேரி மாநில மக்கள் நலத்திட்டங்களை தடுத்து வருகிறார்.
இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க நடவடிக்கை எடுத்த கிரண்பேடியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேலும் ஒரு வழக்கு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.
கிரண்பேடி தனக்கு வேண்டிய தேவநீதி தாஸை தேர்தல் ஆணையராக நியமிக்க என்னென்ன செய்யமுடியுமோ அனைத்தையும் செய்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகமும் மதிப்பதில்லை. கிரண்பேடியும் மதிப்பதில்லை. புதுச்சேரி மாநிலத்தில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கு இரட்டை நிலைப்பாடு உள்ளது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் புதுச்சேரி அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
மாநிலத் தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு. அரசியலமைப்பை மீறி கிரண்பேடி எப்படி செயல்பட முடியும்.
அதிகார துஷ்பிரயோகத்தின் கடைசி எல்லை மாநிலத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடு. மாநிலத் தேர்தல் ஆணையரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நியமித்தது. அவரை நீக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் ஏது?
மற்ற மாநிலங்களில் இலவச அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் இலவச அரிசியை தடுத்த நிறுத்துவது ஏன்? அதற்கான அதிகாரத்தை அவருக்கு அளித்தது யார்?' என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மேலும், பாகூர் சட்டமன்ற உறுப்பினர் குறித்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் நாராயணசாமி , 'பல்வேறு பிரிவுகளில் மத்திய அரசு விருது வழங்கிய நிலையில் அரசின் செயல்பாட்டை பற்றி அவர் எங்களுக்கு சான்றிதழ் அளிக்க தேவையில்லை. அவரைப்பற்றி கட்சித்தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளேன்' என்று கூறினார்.