குன்னூர் பழக்கண்காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடவுப் பணி தொடக்கம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக்கண்காட்சி மே மாதம் நடைபெறுவதை முன்னிட்டு 2 லட்சத்து 60 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவுப்பணி திங்கள் கிழமை தொடங்கியது.
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக்கண்காட்சி மே மாதம் நடைபெறுவதை முன்னிட்டு 2 லட்சத்து 60 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவுப்பணி திங்கள் கிழமை தொடங்கியது.
குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 62வது பழக் கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடவுப் பணியை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பபிதா இன்று தொடங்கி வைத்தார்.
இதில் பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 110 வகையான மலர் நாற்றுகள் உள்ளூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு சிம்ஸ் பூங்காவில் 2 லட்சத்து 60 ஆயிரம் மலர் செடிகளை தொட்டியிலும், பூங்காவிலும் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
Advertisement
இந்த நடவு பணிக்காக அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் , 84 பேர் நடவுப் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தோட்டக்கலை உதவி இயக்குநர் பபிதா கூறுகையில், 142 ஆண்டுகள் பழமை வாய்ந்த 62வது பழக்கண்காட்சிக்காக 2 லட்சத்து 60 ஆயிரம் நாற்றுகளை நடவு செய்ய உள்ளோம். இந்த ஆண்டு புதுமையாக செவ்வந்தி நாற்றுகள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து மலர் நாற்றுகள் இறக்குமதி செய்துள்ளோம் என்றும் இவைகள் இந்த பழக் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமையும் என்றும் இந்த சீசனுக்கு சென்ற ஆண்டை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.