ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி மேம்பாலத்தில் செவ்வாய்க்கிழமை காலை பனிமூட்டம் காரணமாக 9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் பலர் படுகாயமடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலை கடப்பந்தாங்கல் சுங்கச்சாவடி அருகே பனிமூட்டம் காரணமாக முன்னால் சென்ற லாரியின் மீது பின்னால் வந்த 9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.
அதிகாலை முதலே கடுமையான பனிப்பொழிவு இருந்ததால் சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றன.
இந்த நிலையில் வேலூரிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியொன்றின் மீது பின்னால் வந்த கார்கள் மற்றும் இரு லாரிகள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர்
இந்த நேரத்தில் இந்த வழியாக வாணியம்பாடி நோக்கி வந்துகொண்டிருந்த தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபீல், காயமடைந்தவர்களை மீட்டு 4 ஆம்புலன்ஸ் வாகனங்களை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
காயமடைந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடும் பனிப்பொழிவு காரணமாக விபத்து நேரிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.