முகப்பு
தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: அங்காடி மூலம் 5 முகக் கவசங்கள் வழங்கக் கோரி சி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அங்காடிகளில் 5 முகக்கவசங்கள் வழங்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
பகிர்:

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அங்காடிகளில் 5 முகக்கவசங்கள் வழங்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சீனாவில் கரோனா தொற்று நோய் வந்த நாளிலிருந்து, கிராமத்துப் பண்ணையில் பணியாற்றும் பணியாளர் முதல், அமெரிக்கா வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி எனப் படைத்த இறைவன் வரை அனைவருக்குமே ஒவ்வொரு விதத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளியில் வந்தால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த முகக்கவசத்தை அங்காடி மூலம் வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் லெட்சுமாங்குடி பாலத்தருகே, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு, நகரச் செயலாளர் எம்.சுதர்ஸன் தலைமை வகித்தார். 

ஆர்ப்பாட்டத்தில், விவசாயத் தொழிலாளர்கள் சங்க நகரச் செயலாளர் எம்.சிவதாஸ், விவசாய சங்க நகரச் செயலாளர் கே.நாகராஜன், விவசாய தொழிலாளர் சங்க நகரத் தலைவர் ஆர்.ராமாமிர்தம், சி.பி.ஐ. நகர நிர்வாகக் குழு உறுப்பினர் டி.கண்ணையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், அங்காடிக் கடைகள் மூலம், குடும்ப உறுப்பினர்களுக்கு தகுந்த படி 5 முகக்கவசங்கள் தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து, நகரச் செயலாளர் சுதர்ஸன் பத்திரிகையாளர்களிடம் கூறியது. தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினியைப் பயன்படுத்திக் கைகளைக் கழுவ வேண்டும் என தமிழக அரசும், மருத்துவர்களும் அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றனர். கரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் சம்பாதிக்க வழியில்லாமல், சாப்பிடுவதற்கே மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஒரு குடும்பத்தில் 4 பேருக்கும் முகக்கவசமும், கிருமி நாசினியும் எப்படி வாங்க முடியும். பணத்திற்கு எங்கேபோவது? உடனே தமிழக அரசு, ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடியோ அல்லது குடும்பத்திற்கு 5 முகக்கவசங்களையோ வழங்கிட வேண்டும். மேலும், கிருமி நாசினியும், கபசூரக் குடிநீர் பவுடரும் வழங்க வேண்டும். கரோனா தொற்று நோயிலிருந்து, பொதுமக்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.