சாத்தான்குளம் காவல் நிலைய மரணம்: தனி விசாரணை அமைப்பு கோரி ஆர்ப்பாட்டம்
சாத்தான்குளத்தில் தனியொரு விசாரணை அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தக் கோரி, சென்னை உயர்நீதிமன்றம் எதிரே வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் நிலைய மரணம் குறித்து காவல்துறை அல்லாத தனியொரு விசாரணை அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தக் கோரி, சென்னை உயர்நீதிமன்றம் எதிரே வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவரையும் சித்ரவதை செய்து அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது வருகிறது. இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறையினர் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.
பிரகாஷ் சிங் வழக்கில், காவல் நிலைய மரணம் தொடர்புடைய வழக்கை காவல்துறையே விசாரிக்கக் கூடாது என்ற, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தவறு செய்யும் காவலர்களை விசாரிக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும்.
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும். தவறான மருத்துவ அறிக்கை அளித்த மருத்துவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றம் ஆவின் நுழைவு வாயில் அருகே, வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக கன்டண முழக்கங்ளை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக வழக்குரைஞர்கள் சங்க மாநில செயலாளர் பாரதி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் தலைமையில், வழக்குரைஞர்கள் பார்வேந்தன், ஆர்.சுதா உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர்.