முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் காலமானார்
மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஆர். சுந்தர்ராஜன் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.
மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஆர். சுந்தர்ராஜன் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நீண்டகால நண்பர் சுந்தர்ராஜன். தேமுதிக துவங்கியபோது கட்சியின் முதல் பொருளாளராக சுந்தர்ராஜன் நியமிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்த சுந்தர்ராஜன், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பிறகு விஜயகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிக.,விலிருந்து விலகி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் அதிமுகவில் இணைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சுந்தர்ராஜன்.
Advertisement
மதுரை மாவட்டத்தில் அதிமுகவின் கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக அண்மைக்காலமாக பணிகளிலிருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.