தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுள்ளது.
சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து தூத்துக்குடி சிபிசிஐடி பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட 5 போ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) மூலம் விசாரிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை விசாரிக்க முதல்வர் விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு தற்போது அறிவிக்கையை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.