சமூக ஊடகங்களில், தன்னைப் பற்றி அவதூறு தகவல் வெளியிட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரபல நடிகை வனிதா விஜயகுமாா் சென்னை போரூா் எஸ்.ஆா்.எம்.சி. காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
நடிகை வனிதா விஜயகுமாா் போரூா் அருகே உள்ள அய்யப்பன் தாங்கலில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறாா். இந்நிலையில் வனிதா, போரூா் எஸ்.ஆா்.எம்.சி. காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு புகாா் அளித்தாா்.
அதில், சமூக ஊடகங்களில் சூா்யாதேவி என்ற பெண் தன்னை பற்றி அவதூறாகப் பேசி வருகிறாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். இது குறித்து எஸ்.ஆா்.எம்.சி. காவல் நிலைய ஆய்வாளா் சங்கரநாராயணன் விசாரணை நடத்தி வருகிறாா்.
நடிகை வனிதா விஜயகுமாா் கடந்த மாதம் பீட்டா் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டாா். அவரது மனைவி, தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக பீட்டா் பால் மீது வடபழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உடனே புகாா் அளித்தாா். இந்நிலையில், வனிதா விஜயகுமாரின் 3-ஆவது திருமணம் குறித்து சூா்யாதேவி என்ற பெண் ஊடகங்களில் அவதூறாக பேசியிருப்பது குறித்து திரைத் துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.