கிராமப்புற சிறார்களுக்குச் செயல்முறை கல்வி போதிக்கும் ஆதிரா அறக்கட்டளை
கிராமப்புற குழந்தைகளுக்கு செயல்முறை கல்வியை ஆதிரா அறக்கட்டளை போதித்து வருகிறது.
கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் கிராமப்புற குழந்தைகளுக்கு செயல்முறை கல்வியை ஆதிரா அறக்கட்டளை போதித்து வருகிறது.
பொதுமுடக்கத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு ஆதிரா அறக்கட்டளை சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் பாதிரிவேடு, ஆரம்பாக்கம் நொச்சிக்குப்பம், பெரியவேடு, கண்ணம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதிரா அறக்கட்டளை நிறுவனர் கே.ரோகிணி ஏற்பாட்டில் ஒருங்கிணைப்பாளர் கே.வி.முனி ராகுல், எம்.சுரேந்தர் மேற்பார்வையில் 3 வயதிலிருந்து 16 வயது வரையிலான மாணவர்களுக்கு செயல்முறை கல்வி, இயற்கை வழிக்கல்வி, நீதிநெறி கதைகள் உள்ளிட்டவைகள் கற்றுத் தரப்படுகிறது.
இதன் மூலம் மேற்கண்ட பகுதியை சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பயனடைகின்றனர். இந்த செயல்பாட்டின் மூலம் 3-4 வயதுடைய மாணவர்களும் செயல் முறை கல்வி கற்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
Advertisement
இது குறித்து ஆதிரா அறக்கட்டளை நிறுவனர் கே.ரோகினி தெரிவித்தபோது..
அந்தந்த கிராமங்களில் ஓரளவு படித்த ஆர்வமுள்ள தன்னார்வலர்களைக் கொண்டு ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுவதாகவும், இது மனப்பாட கல்வி போல இல்லாமல் புகைப்படங்களை வைத்தும், பொம்மை மற்றும் பல்வேறு பொருட்களை கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
மேலும் மாணவர்களுக்கு தினந்தோறும் நீதிநெறி கதைகள் கற்றுத் தருவதோடு, மாணவர்களின் பாடல், கதை சொல்லல், ஓவியம் வரைதல் போன்ற திறமைகளுக்கு ஊக்கம் தரப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.
ஆதிரா அறக்கட்டளை மூலம் பல்வேறு கிராமப்புற மாணவர்கள் பொது முடக்கக் காலத்தை உற்சாகமாகக் கழிப்பதோடு, கல்வி வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும் மாணவர்களின் உடலையும் மனதையும் வலுப்படுத்த அவர்களுக்கு எளிய உடற்பயிற்சிகள், யோகா, தியானம் ஆதிரா அறக்கட்டளை மூலம் கற்பிக்கப்படுகிறது.
மேலும் கரோனா பொதுமுடக்க காலத்தில் ஆதிரா அறக்கட்டளை மூலம் மாநெல்லூர், நேமள்ளூர், கண்ணம்பாக்கம், பாதிரிவேடு, மாதர்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பழங்குடியின மக்களுக்கும், ஏழை எளியோருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது. அத்துடன் உணவிற்கு தவித்த சாலையோர நாய்களுக்கு ,நாய்களுக்கு வழங்கும் பிரத்யேக உணவான பெடிக்கிரீஎன்கிற உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.