வீரகனூர் ஏரியில் சீமைக்கருவேல முட்களே அதிகம் சிக்குவதால் மீனவர்கள் வேதனை
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூரில் ஏரியில் மீன்கள் சரிவரக் கிடைக்கவில்லை என்று வீரகனூர் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூரில் ஏரியில் மீன்கள் சரிவரக் கிடைக்கவில்லை என்று வீரகனூர் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், வீரகனூர் ஏரியில் இந்த வருடம் கடைஓடி, ஏரி நீர் நிரம்பியது.இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மீனவர்களும் வழக்கம்போல் இதில் வளர்ப்பு மீன் குஞ்சுகளை விட்டிருந்தனர். தற்சமயம் மீன்கள் வளர்ந்து, பிடிப்பதற்குத் தயாரான வேளையில், மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஏரிக்குள் இறங்கும் போதெல்லாம், அங்கே குடிமகன்களால் உடைத்துப் போடப்பட்டிருந்த கண்ணாடி பாட்டில்களின் கண்ணாடித் துண்டுகளால் கால்களைக் கிழித்துக்கொண்டும், ஏரியை சுத்தம் செய்த பொழுது அப்புறப்படுத்தப்படாத சீமைக்கருவேல முட்களால் கால்களை கிழித்துக் கொண்டும் கரைக்கு வந்தனர்.
இதுகுறித்து வீரகனூர் பகுதி மீனவர்கள் கூறியது,
மீன் பிடிப்பதற்கு ஏரியினுள் வலை வீசினால் ஒரு கிலோ மீன்கள் கிடைப்பதற்குள் 5 கிலோ சீமை கருவேல முட்கள் சிக்குகிறது. பின்னர் வலையில் சிக்கிய சீமைக்கருவேல முட்களை அகற்ற 10 பேர் வேலை செய்ய வேண்டியுள்ளது. அப்படி இல்லையென்றால் அந்த வலையையே வீசிவிழுகின்றோம்.
நாங்கள் ஒன்று சேர்ந்து சுமார் 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து ஏரிக்கு வளர்ப்பு மீன்குஞ்சுகளைக் கொண்டு வந்து விட்டோம். ஆனால், தற்சமயம் ஏரியில் நிலவும் சூழ்நிலைகளால் நாள் ஒன்றுக்கு 10 கிலோ மீன் பிடிப்பதற்காகவே தங்களுக்கு மேலும் 1500 ரூபாய் செலவு ஏற்படுகிறது. இந்த ஏரி முழுக்க நீர் வற்றும் வேளையில் கிடைக்கும் மீன்களால் மட்டுமே ஓரளவு நஷ்டத்தைச் சமாளிக்க முடியும் என்றனர்.