புதுக்கோட்டை நகரில் மாவட்ட மனநலத் திட்டத்தின் ஒருங்கிணைப்பில் வருவாய்த் துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகிய துறையினர் இணைந்து நகரில் சுற்றித் திரியும் ஆதரவற்ற மனநலன் பாதித்தோரை மீட்கும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கினர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகச் சாலை, டிவிஎஸ் முக்கம், மருப்பிணி, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்த தலா இரு ஆண், பெண் என மொத்தம் 4 பேர் மீட்கப்பட்டனர்.
தொடக்கத்தில் இவர்கள் குளிக்க வைக்கப்பட்டு ஆடைகள் மாற்றப்பட்டனர். தொடர்ந்து உணவு வழங்க மனநல சிகிச்சையும் தொடங்கப்பட்டது. வருவாய்க் கோட்டாட்சியர் எம்.எஸ். தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் இந்த மீட்புப் பணியில் பங்கேற்றனர்.
இத்திட்டம் குறித்து மாவட்ட மனநலத் திட்ட அலுவலர் டாக்டர் கார்த்திக் தெய்வநாயகம் கூறியது:
மாவட்ட பழைய அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் இவர்களுக்காக தனி இடம், கவனிப்பாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக மாவட்டம் முழுவதுமுள்ள மனநலம் பாதித்தோர் மீட்கப்படுவர். சிகிச்சைக்குப் பிறகு குடும்ப உறவுகள் கண்டறியப்பட்டு அவர்களுடன் ஒப்படைக்கப்படுவர் என்றார் கார்த்திக் தெய்வநாயகம்.