புதுச்சேரியில் 100 யூனிட் மின்சாரம் இலவசம்: முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நாராயணசாமி
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடியின் எதிர்ப்பையும் மீறி, முழு பட்ஜெட்டெ தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி.
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடியின் எதிர்ப்பையும் மீறி, 2020 - 21 ஆம் நிதி ஆண்டிற்கான, ரூ.9 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி.
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்காமல் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் தலைமையில் இன்று காலை தொடங்கியது. பட்ஜெட்டிற்கு கிரண்பேடி ஒப்புதல் வழங்காத நிலையில் கூட்டத்தொடர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
100 யூனிட் மின்சாரத்துடன், இலவசமாக குடிநீர் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டம் திமுக தலைவர் கருணாநிதி பெயரில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக துணைநிலை ஆளுநரின் உரையில்லாமல், சட்டப்பேரவை தொடங்கப்பட்டு, இன்று முழு பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
ஆளுநர் அனுமதி அளிக்காத நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து பேசி வருகிறார். ஆளுநர் அனுமதி இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, நியமன பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.