மயிலம் அருகே வங்கி காசாளருக்கு கரோனா: வங்கி மூடல்
மயிலம் அருகே எஸ்.பி.ஐ வங்கியில் பணிபுரியும் காசாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, வங்கி மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மயிலம் அருகே எஸ்.பி.ஐ வங்கியில் பணிபுரியும் காசாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, வங்கி மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே கொல்லியங்குணம் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவர் மயிலத்தில் உள்ள ஸ்டேட் பேங்கில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கரோனா தொற்று அறிகுறி இருந்ததையடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார்.
நேற்று அவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து கொல்லியங்குணத்திலுள்ள அவரது வீட்டில் சுகாதாரத்துறையினர் ஸ்டிக்கர் ஒட்டினார். சுகாதாரத்துறை சார்பில் அவரது வீடு இருந்த பகுதி அடைக்கப்பட்டன. தெரு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
காசாளர் பணிபுரிந்த வங்கி முன்பு கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. அங்கிருந்த ஏடிஎம் மையத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மயிலம் ஸ்டேட் பாங்க் காசாளருக்குத் தொற்று உறுதியானதை வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. திங்கள்கிழமை முதல் மூன்று தினங்கள் வங்கி இயங்காது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, வங்கி மூடப்பட்டது.