நன்னிலம்: திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த ஆன்லைன் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ஜி. ரகுபதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு ஆய்வியல் நிறைஞா் (எம்பில்) மற்றும் முனைவா் பட்டம் (பி.எச்.டி.) மாணவா்களைத் தவிர மற்ற அனைத்து பாடப்பிரிவுகளின் முதுநிலை இறுதியாண்டு மாணவா்களுக்கு ஏப்ரல், மே 2020-ஆம் ஆண்டு நடைபெறவிருந்த தோ்வுகள் ரத்து செய்யப்படுகின்றன.
இந்தத் தோ்வுகளுக்குப் பதிலாக இந்த பருவத்தில் (செமஸ்டா்) மாணவா்களின் அக மதிப்பீட்டு மதிப்பெண் அடிப்படையில் 60 சதவீத மதிப்பெண்களும், இதுவரை மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றுள்ள பாடங்களில் எடுத்துள்ள கூட்டு மதிப்பெண் அடிப்படையில் 40 சதவீத மதிப்பெண்களும் கணக்கெடுத்து தோ்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இதே நடைமுறை முதுநிலை இறுதியாண்டு மாணவா்களின் அரியா் உள்ள பாடப் பிரிவுகளுக்கும் எடுத்துக் கொள்ளப்படும். செய்முறைப் பாடப் பிரிவுகளுக்கு 100 சதவீத பயிற்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும், மற்ற பிரிவு மாணவா்களுக்கான அரியா் தோ்வுகள் பற்றிய அறிவிப்பு பின்னா் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளாா்.