பவானியை அடுத்த குருவரெட்டியூர் ஊராட்சியில் கரோனா தொற்றால் மூவர் பாதிக்கப்பட்ட நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 116 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அடுத்த குருவரெட்டியூர், ஆசிரியர் குடியிருப்பு பகுதிக்கு சென்னையிலிருந்து திரும்பிய 54 வயதான கணவர், 46 வயதான மனைவி, 13 வயதான மகள் ஆகியோர் கடந்த 18-ஆம் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பினர். மூவருக்கும் செய்யப்பட்ட பரிசோதனையில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், குருவரெட்டியூர் ஆசிரியர் குடியிருப்புப் பகுதியில் இரு தெருக்கள் சீல் வைக்கப்பட்டு, சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, குருவரெட்டியூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அருள்மணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் அப்பகுதியைச் சேர்ந்த 116 பேருக்கு கரோனா பரிசோதனை செய்தனர். சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.