திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு முதியவர் பலி
திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் உயிரிழந்தார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி இ.பி.சாலையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில், இவர்களில் 70 வயது முதியவர் புதன்கிழமை பிற்பகல் உயிரிழந்தார். இதையடுத்து, உடன் இருந்த உறவினர்களான கரோனா தொற்றாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர். தங்களை வீட்டுக்கு அனுப்பவும் கோரி வாக்குவாதம் செய்து, மருத்துவமனை வார்டிலிருந்த ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
ரகளையில் ஈடுபட்டவர்கள் கரோனா தொற்றாளர்கள் என்பதால் உடனடியாக காவல்துறையினர் சென்று அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், அந்த வார்டிலிருந்த பாதுகாப்பு உடை அணிந்த காவலர்கள் அவர்களைக் கட்டுப்படுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.