தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்த 27 காவலர்களை சாத்தான்குளத்துக்கு இடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உத்தரவிட்டுள்ளார்.
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். புதிய ஆய்வாளராக பெர்னட் சேவியரும், உதவி ஆய்வாளர்களாக முத்துமாரி, மணிமாறன் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்த 27 காவலர்கள் சாத்தான்குளத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.