முகப்பு
தமிழ்நாடு

இயற்கையோடு இணைந்து வாழ பழகுங்கள்: பட்டமளிப்பு விழாவில் பாரதிதாசன் பல்கலைக் தேர்வு கட்டுப்பாட்டாளர் அறிவுரை

இயற்கையோடு இணைந்து வாழ பழகுங்கள் என பாரதிதாசன் பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் எஸ். சீனிவாசராகவன் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மாணவமாணவியர்களுக்கு

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:05 PM
பகிர்:

இயற்கையோடு இணைந்து வாழ பழகுங்கள் என பாரதிதாசன் பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் எஸ். சீனிவாசராகவன் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மாணவமாணவியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவுக்
கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியது;
1967ல் தொடக்கப்பட்ட இக்கல்லூரி தான், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில்
இணைவுபெற்ற கல்லூரிகளிலே முதலில் இளநிலை கணிணி அறிவியல் பட்ட படிப்பை மாணவமாணவியர்களுக்கு 1980 தொடக்கத்தில் அறிமுகப்படுத்தி பெருமை பெற்றுது. அறிஞர் அண்ணா, அப்துல்கலாம் உள்ளிட்ட மிகப்பெரிய இந்திய ஆளுமைகளை இக்கல்லூரிக்கு நிர்வாகம் அவ்வப்போது அழைத்து வந்து இங்கு பயிலும் மாணவமாணவியர்களை ஊக்கப்படுத்தியிருப்பது பெருமைக்குரியது. 

இன்று தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக நூல்களை வாசிப்பதும், நூலகங்கள் செல்வதும் குறைந்து விட்டது. எத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிகள் வந்தாலும் ஒரு துறையில் உள்ள மனித ஆளுமையையும், மூலத்தையும் அகற்றிவிட முடியாது. இணையத்தில் உள்ள அத்தனை தகல்வகளும் உறுதி செய்யப்பட்டவையா, உண்மைத் தன்மையுடையவையா, நம்பகத்தன்மை உடையனவா என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் நூல்கள் அப்படி அல்ல. அவைகள் நம்பகத்தன்மையுடையவை. உறுதி செய்யப்பட்ட தகவல்களை கொண்டவை. எனவே இந்த தலைமுறையினர் நூல்களை வாசிக்கிற பழக்கத்தை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். 

Advertisement

வசதியாக வாழ்வதை விட இயற்கையோடு வாழ்தல் சிறந்தது. இயற்கையோடு வாழும் போது தான் மண்ணின் மரபுகளும், இன மற்றும் மொழி அடிப்படையிலான கலச்சாரங்களும் காப்பற்றப்படும். நமது மரபுகளும், கலாச்சாரங்களும் தான் உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது. வேளாண்மையை கைவிட்டு வருகிறோம். நான் இளைஞராக இருந்து போது வீடுகளில் சுய தேவைக்கான காய்கறி தோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இப்போது யாரும் அது போன்று தோட்டங்களை வளர்ப்பதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் 25 மரங்களை வளர்த்து வனங்களை உருவாக்க வேண்டும். பட்டம் பெறுகிற ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த துறை வழியாக தங்களுடைய பகுதியின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை வழங்குவதன் மூலம் நம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கமுடியும். 

இந்தக் கல்லூரி வழியாக பட்டங்களை பெற்று வாழ்வில் சிறப்படைந்திருக்கிற தாங்கள் அனைவரும் இந்தக் கல்லூரி மற்றும் இங்கு படிக்கிறவர்களுக்கு வழிகாட்டியாகவும், உதவியாகவும் இருக்க வேண்டும். நாட்டில் பெண்கள் அதிகமாக கல்வி பெறுகிறார்கள். ஆனால் குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட மற்ற காரணிகளால் அவர்களால் உரிய வேலைவாய்ப்புக்கு செல்லமுடியவி;ல்லை. ஆனால் கல்வியறிவு பெற்ற பெண்களால் குடும்பம் நல்ல வளர்ச்சி பெறும். சதுரங்கம், டென்னிஸ் விளையாட்டைச் சார்ந்த விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மகேஸ்பூபதிக்கு அவர்களுடைய தாயார் தான் உந்துசக்தியாக இருந்துள்ளனர். நிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாக குழுத் தலைவர் பொன் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசினார். 

செயலர் பொன் ரவிசந்திரன் வரவேற்றார். முதல்வர் பொன் பெரியசாமி வரவேற்றார். நிர்வாக குழவைச் சேர்ந்த பொன். சிவனேஸ்வரி, தேன்மொழி தங்கராஜா, துணை முதல்வர் எஸ். குமாரராமன், டீன்கள் தமிழ்மணி, சசிகுமார், டி. விஜிசரள் எலிசபெத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக் கழக அளவில் இளங்கலை விலங்கியல் பட்ட படிப்பில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற ஜி. விஜய் உள்பட 20 பல்கலை தர வரிசை பெற்றகளுடன் இளங்கலை பட்டம் 832 முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் 190 உள்பட 1022 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் டி.ஜெயபிரகாசம், பெற்றோர் கழக தலைவர்
ராமதாஸ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், துறை தலைவர்கள், பெற்றோர்கள்,
மாணவமாணவியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments