போடி வனப்பகுதியில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீ காரணமாக மரங்கள் நாசமடைந்து வருகிறது. வன விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகிறது.
போடி வனப்பகுதியில் மரக்காமலை, ராசிங்காபுரம், தேனி அருகே வீரப்ப அய்யனார் மலைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டுத் தீ பரவி வருகிறது. ஒரு பக்கம் வனத்துறையினர் தீயை அணைக்க முயன்றாலும் அடுத்தடுத்த பகுதிகளில் தீ விட்டு விட்டு எரிந்து வருகிறது. நவீன கருவிகள் இல்லாமல் வனப்பகுதியில் வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், போடி அருங்குளம் வனப்பகுதியில் சனிக்கிழமை காட்டுத் தீ பற்றி மளமளவென பரவி வருகிறது. வனப் பாதுகாவலர் செல்வராஜ் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தீத்தடுப்பு தன்னார்வலர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதியில் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு காணப்படும் செடி, கொடிகளை வைத்தே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தீ அடுத்தடுத்த பகுதிகளில் பரவி வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள காட்டு விலங்குகளான காட்டெருமை, பன்றி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு ஊருக்குள் புகும் சூழல் நிலவுகிறது.