கோவை: கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கோவை மாவட்டத்தில் அரசுப் பேருந்து ஒன்றிக்கு கிராம மக்கள் வேப்பிலை கட்டி, மஞ்சள் தெளித்த சம்பவம் நடந்துள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை மண்டலத்தில், 300 - க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, பேருந்துகளில் மக்கள் கூட்டம் பெருமளவு குறைந்துள்ளது. கரோனா பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பேருந்து சக்கரங்கள், இருக்கைகள், கம்பிகள் உள்ளிட்ட பேருந்துகளின் அனைத்துப் பகுதிகளிலும், சுகாதாரப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக, கோவை காந்திபுரத்தில் இருந்து பேரூர், மாதம்பட்டி, ஆலாந்துறை வழித்தடத்தில் நாதேகவுண்டன்புதூர் வரை இயக்கப்பட்டு வருகின்ற அரசுப் பேருந்து 14-இல், நாதேகவுண்டன்புதூர் கிராம மக்கள் பேருந்துகளின் வெளிப்புறம், உள்புறங்களில் வேப்பிலை, துளசியை கொத்துக் கொத்தாகச் செருகி வைத்தும், பேருந்தின் படிக்கட்டுகள் மற்றும் நடைமேடையில் மாட்டுச்சாணம், மஞ்சள் கரைசலைக் கலந்தும் தெளித்துள்ளனர்.
இதுகுறித்து நாதேகவுண்டன்புதூர் கிராம மக்கள் கூறுகையில், "வேப்பிலை, துளசி, மஞ்சள், மாட்டுச் சாணம் உள்ளிட்டவை ஆதி காலம் முதல் கிருமிகளை அழிக்கும் கிருமிநாசினிகளாகக் கருதப்படுகிறது. அதனால், அதிகளவு கிராம மக்கள் பயணிக்கும் அரசுப் பேருந்தில் வேப்பிலை, துளசி கட்டப்பட்டு, மஞ்சள், மாட்டுச்சாணம் தெளிப்பதால் நோய்க் கிருமி தாக்காது என நம்புகிறோம் என்றனர்.