சென்னை: இந்த நெருக்கடி நேரத்தில் என் வீட்டை மருத்துவமனையாக்கி மக்களுக்கு உதவ நினைக்கிறேன் என்று மநீம தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 539 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்து பேர் பலியாகியுள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை இந்த வைரஸ் தாக்குதலால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் ஒருவர் செவ்வாய் இரவு மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் இந்த நெருக்கடி நேரத்தில் என் வீட்டை மருத்துவமனையாக்கி மக்களுக்கு உதவ நினைக்கிறேன் என்று மநீம தலைவர் கமல் தெரிவத்துள்ளார்.
இதுதொடர்பாக புதனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.