நடிகர் கமல்ஹாசன் தனது வீட்டை மருத்துவ மையமாக மாற்றி மக்களுக்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது வீட்டை மருத்துவ மையாக மாற்றி மக்களுக்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதைச் செய்ய தயாராக காத்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.