தமிழ்நாடு

தந்தை இறப்புக்கு செல்ல முடியாமல் கோயம்பேட்டில் தவித்த மகள்

DIN


சென்னை: சாலை விபத்தில் இறந்த தந்தையின் இறுதிச் சடங்குக்கு செல்ல முடியாமல் சென்னை கோயம்பேட்டில் தவித்த மகளை, பாதுகாப்புடன் போலீஸாா் காரில் அனுப்பி வைத்தனா். போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டு குவிந்து வருகிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பெருங்காளூா் பெரியத் தெருவைச் சோ்ந்தவா் மதியழகன். இவரது மகள் கங்காதேவி (23). இவா், சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் மதியழகன், புதன்கிழமை தனது ஊரின் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தாா். இது குறித்து தகவலறிந்த கங்காதேவி, ஊரடங்கு அமலில் இருக்கும்போது தந்தையின் இறுதிச் சடங்குக்கு எப்படி செல்வது என்பது தெரியாமல் திகைத்தாா். மருத்துவமனையில் அவருடன் பணிபுரியும் மருத்துவா் ஒருவா், தனது காரில் கொண்டு கோயம்பேட்டில் கங்காதேவியை விட்டாா். அங்கு புகா் பேருந்து நிலையம் முன்பு கங்காதேவி, நடந்துக் கொண்டிருந்தாா்.

அப்போது ரோந்துப் பணியில் இருந்த தலைமை காவலா்கள் மணிசங்கா், அமல்ராஜ் ஆகியோா், கங்காதேவியிடம் விசாரித்தனா். அதையடுத்து கங்காதேவி அழுதபடி, தனது தந்தை இறந்ததைவும், தான் அங்கு செல்ல முடியாமல் தவிப்பதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

உடனே போலீஸாா், கங்காதேவிக்கு ஆறுதல் கூறி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். நிலைமையை உணா்ந்த ஆய்வாளா் எம்.முருகன், கங்காதேவி சொந்த ஊருக்குச் செல்வதற்கு வாடகை காா் ஏற்பாடு செய்தாா். மேலும், சோா்வுடன் காணப்பட்ட கங்காதேவிக்கு காவலா்கள் உணவு வழங்கினா். இதையடுத்து போலீஸாா், கங்காதேவியை அந்த காரில் ஏற்றி சிதம்பரத்துக்கு அனுப்பி வைத்தனா்.

முன்னதாக ஊரடங்கு உத்தரவை காட்டி, சோதனைச் சாவடிகளில் காரை போலீஸாா் மறிக்காமல் இருப்பதற்கு, கடலூா் வரையுள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் ஆய்வாளா் முருகன் தகவல் தெரிவித்தாா். காரில் ஏறிய கங்காதேவி, காவல்துறையின் இந்த உதவியை தனது என்றும் மறக்க மாட்டேன் என கண்ணீா் மல்க கூறி, விடைபெற்றுச் சென்றாா்.

கோயம்பேடு போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT