தமிழகத்தில் மேலும் 203 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 2,323 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு 2,526 ஆக அதிகரித்துள்ளது.
இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்தில் புதிதாக 203 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரேநாளில் 176 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு 1,082 ஆனது. சென்னையில் இன்று மட்டும் 3,200 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 54. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,312. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8, திருவள்ளூரில் 6, மதுரையில் 3, காஞ்சிபுரம், தஞ்சாவூரில் தலா இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று பாதிப்பு 200 ஐத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பாதிப்பு: 2,526
உயிரிழந்தோர் எண்ணிக்கை: 28
குணமடைந்தோர் எண்ணிக்கை: 1,312