தமிழ்நாடு

கடல் வழியாக தப்பிச் செல்லும் வெளி மாநில மீனவர்கள்

தமிழகத்தில் இருந்து கடல் வழியாக படகு மூலம் வெளி மாநில மீனவர்கள் ஒடிஸா, ஆந்திர மாநிலங்களுக்குத் தப்பிச் செல்வதை தடுக்கும்

கே.வாசுதேவன்



சென்னை: தமிழகத்தில் இருந்து கடல் வழியாக படகு மூலம் வெளி மாநில மீனவர்கள் ஒடிஸா, ஆந்திர மாநிலங்களுக்குத் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில், படகுகளுக்கு மாநில கடலோர பாதுகாப்புக் குழுமம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

கரோனா நோய்ப் பரவலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கினால் வெளி மாநில தொழிலாளர்கள் அரசால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழகம் முழுவதும் உள்ள 3,800 முகாம்களில் சுமார் 1.88 லட்சம் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர்த்து அதிகளவிலான தொழிலாளர்கள், பணிபுரியும் நிறுவனங்களிலும், அங்குள்ள குடியிருப்புகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  வேலைவாய்ப்பு இல்லாததினாலும், கரோனா மீதான பயத்தினாலும் வெளிமாநிலத் தொழிலாளர்கள், நெடுஞ்சாலைகள் வழியாக நடந்தும், மோட்டார் சைக்கிள், சைக்கிள் மூலமாகவும் சொந்த ஊர்களுக்குச் செல்லும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

2 ஆயிரம் மீனவர்கள்: சென்னை காசிமேடு பகுதியில், ஒடிஸா, ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் தங்கியிருந்து மீன்பிடி வேலை செய்து வருகின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால்,  மீன்பிடித் தொழிலுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கூடுதலாக மீன்பிடி தடைக்காலமும் தொடங்கியதால், இந்த மீனவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது சொந்த ஊருக்குச் செல்வதற்குரிய வாய்ப்பை இழக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்நிலையில், காசிமேடு பகுதியில் இருந்து ஒடிஸா, ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், கடல் வழியாக படகு மூலம் அவர்களது சொந்த ஊருக்குச் சென்றிருப்பது தமிழக காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1,100  கடல் மைல் பயணம்: காசிமேட்டில் வசித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த இந்த இரு மாநிலங்களைச் சேர்ந்த 38 பேரும், ரூ.2 லட்சம் மதிப்பிலான 10 குதிரை திறன் கொண்ட இரு என்ஜின்கள் பொருத்தப்பட்ட ஒரு படகை, கடந்த வாரம்  வாங்கினர். பயணத்துக்கு சிறிதளவு உணவு, குடிநீர், படகுக்குத் தேவையான எரிபொருள் ஆகியவற்றை வைத்துக் கொண்டனர். கடலில் 1,100 மைல் தூரம் பல நாள்கள் பயணம் செய்து, முதலில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் சென்றனர். அங்கு ஆந்திர தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர். பின்னர், அங்கிருந்து ஒடிஸா மாநிலம் கஞ்சம் பகுதிக்கு சென்றுள்ளனர். இதேபோல, ராயபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் கரோனாவுக்கு பயந்து, படகு மூலம் மாமல்லபுரத்துக்கு தப்பிச் சென்றுள்ளனர். தமிழகத்திலேயே கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியாக ராயபுரம் இருக்கும் சூழலில் நடைபெற்ற இந்த நிகழ்வு, காவல்துறையினரிடம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

படகுகளுக்கு கட்டுப்பாடு: இந்த சம்பவங்களுக்குப் பின்னர், தமிழக காவல்துறை, கடல் பகுதிகளில் பாதுகாப்பையும், தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்புக் குழுமம், கடல் பகுதியில் ரோந்துப் பணியையும் பன்மடங்கு தீவிரப்படுத்தியது. 

இது தொடர்பாக தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் உயர் அதிகாரி கூறியது: கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காகவும்,  வெளி மாநிலத் தொழிலாளர்கள் தப்பிச் செல்வதைத் தடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். மாநிலம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் நாட்டுப்படகுகள், 10 குதிரை திறன் என்ஜின் கொண்ட படகுகள் உள்ளன. தற்போது மீன்பிடித் தடைக்காலம் என்பதால் நாட்டுப்படகுகள்,10 குதிரை திறன் என்ஜின் உள்ள படகுகள் ஆகியவை மட்டும் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றிலும் நாள்தோறும் 4 ஆயிரம் படகுகளை மட்டுமே கடலுக்குச் செல்ல அனுமதிக்கிறோம். ஒரு படகில் 3 முதல் 5 மீனவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். 12 கடல் மைல்களுக்கு மேல் எக்காரணம் கொண்டும் செல்லக் கூடாது. படகுகளில் தேவையை விட கூடுதலாக எரிபொருளோ, உணவோ இருக்கக் கூடாது. கடலுக்குச் செல்லும் படகுகள் கரைக்கு குறிப்பிட்ட நேரத்தில் திரும்பி வருகிறதா என கண்காணிக்கிறோம். இக்கண்காணிப்பு பணியில் 24 அதிவிரைவு படகுகள் மாநிலம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

படகுகள் பறிமுதல்: கடலோரப் பகுதியை உள்ளூர் போலீஸாருடன் இணைந்து தீவிரமாக கண்காணிப்பில் வைத்துள்ளோம். எங்களது உளவுத்துறையின் மூலம் மீனவ கிராமங்களில் இருந்து ரகசியத் தகவல்களைத் திரட்டுகிறோம். சந்தேகத்துக்குரிய வகையில் இருக்கும் படகு உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்கிறோம். விதிமுறைகளை மீறி செயல்படுகிறவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களது படகுகளையும் மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்து வருகிறோம். கடல் வழியாக மீனவர்கள் அபாயகரமான பயணத்தை மேற்கொள்வதைத்  தடுக்கும் வகையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். எங்களது நடவடிக்கைகளையும் மீறி கடல் வழியாக வேறு மாநிலங்களுக்குச் செல்ல முயன்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

சொந்த ஊருக்கு அனுப்புங்கள்: இந்நிலையில், மீன்பிடித் தொழில் செய்து வரும் பிற மாநில மீனவர்களை சொந்த ஊருக்கு அரசே அனுப்ப வேண்டும் என்று அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செய்தி தொடர்பாளர் நாஞ்சில் பீ.ரவி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT