முகப்பு
தமிழ்நாடு

திருப்பூரில் 2 ஆட்டோ ஓட்டுநர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கு கரோனா பரிசோதனை

திருப்பூரை அடுத்த இடுவாய் பகுதியில் 2 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:35 PM
கோப்புப் படம்
பகிர்:

திருப்பூரை அடுத்த இடுவாய் பகுதியில் 2 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் 3 கட்டங்களாக வரும் மே 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெளி நாடு சென்று வந்தவர் என மொத்தம் 112 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு கோவை, இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில், 109 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாலும், 6 நாள்களாக யாருக்கும் புதிய பாதிப்பு இல்லாததால் ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி நகரும் நிலையில் இருந்தது.

தர்பூசணியுடன், கரோனாவையும் கொண்டு வந்த ஆட்டோ ஓட்டுநர்கள்: திருப்பூரை அடுத்த இடுவாய் பாரதிபுரம் பகுதியில் வசித்து வந்த 22 வயது மற்றும் 50 வயதுடைய 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்னர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் சென்று வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் அங்கிருந்து தர்பூசணியை ஆட்டோவில் ஏற்றி விற்பனைக்காக இடுவாய்க்கு கொண்டுவந்தனர்.

ஆனால் இங்கு வந்த இருவருக்கும் கரோனா நோய்க்கான அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இரு ஓட்டுநர்களும் தாமாகவே முன்வந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்குநடத்திய பரிசோதனையில் கரோனா நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது. இதனிடையே, அவர்களுடன் கறி விருந்தில் பங்கேற்றவர்கள், கபடி விளையாடியவர்கள் என 20க்கும் மேற்பட்டோருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதனிடையே, இருவரும் வசித்து வந்த ராஜகணபதி நகர், ஆட்டையாம்பாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளை காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர். மேலும், இடுவாயில் இருந்து மங்கலம் செல்லும் சாலையையும் காவல் துறையினர் இரும்புத் தடுப்பு வைத்து தடுத்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக இடுவாய், பாரதிபுரம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களிடையே ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்தப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவப்பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →