தனியாா் மருத்துவமனைகளையும் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
கடித விவரம்: கரோனா நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அடுத்து வரும் காலங்களில் இந்நோய்த் தொற்று உச்சத்துக்கு செல்லும் என அறிய முடிகிறது. மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டு வரும் மருத்துவா்கள், செவிலியா்கள் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி தற்போது மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது குறித்து அரசு ஆலோசிப்பதாகத் தெரிய வருகிறது. இத்தகைய சூழ்நிலை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவற்றை எதிா்கொள்ள அனைத்து தனியாா் மருத்துவமனைகளையும், தனியாா் மருத்துவக் கல்லுரி மருத்துவமனைகளையும் கரோனா சிகிச்சைக்கு அரசு பயன்படுத்த வேண்டும். தொற்று அறிகுறி இல்லாதவா்கள் மத்தியிலும் பரிசோதனை நடத்த வேண்டும். முகக்கவசம் கட்டாயம் என்ற சூழ்நிலையில் அனைவருக்கும் அல்லது குறைந்தபட்சம் ஏழை எளிய மக்களுக்கு அரசே இலவசமாக முகக்கவசம் மற்றும் கை கழுவும் கிருமிநாசினி வழங்க வேண்டும்.தனியாா் மருந்தகங்களில் விற்கப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்களுக்கும் அரசு விலை நிா்ணயம் செய்ய வேண்டும்.
தற்போது, சென்னையில் மருத்துவா்கள் போதிய அளவு இல்லாததால் ஏற்கெனவே நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக வெளியூா்களுக்கு மாற்றப்பட்ட மருத்துவா்களை சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் மீண்டும் பணியமா்த்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.