திருச்சியில் மாட்டு வண்டி மணல் குவாரிகள் திறப்பு: கொள்ளிடம் ஆற்றிலும் திறக்கப்படுமா?
திருச்சி மாவட்டத்தில், சுமார் 2 மாத இடைவெளிக்குப் பின்னர், காவிரியாற்றில் மாட்டு வண்டி மணல் குவாரிகள்..
திருச்சி மாவட்டத்தில், சுமார் 2 மாத இடைவெளிக்குப் பின்னர், காவிரியாற்றில் மாட்டு வண்டி மணல் குவாரிகள் செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்பட்டு மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் சுமார், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நீண்ட காலமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில் மணல் எடுத்து தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி மணல் மாட்டு வண்டி ரீச் -ம் (குவாரியும்) மூடப்பட்டன. இதனால் மணல் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் மாடுகளுக்கு தீவனம் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில், மாவட்டச் செயலாளர் சேகர், மாவட்ட தலைவர் ஜி.கே.ராமர், சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர், திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராஜிடம் மணல் மாட்டு வண்டி ரீச்சை திறக்கக்கோரி கடந்த மே 15-ஆம் தேதி மனு கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருவளர்சோலை பகுதியில் உள்ள மணல் ரீச், செவ்வாய்க்கிழமை காலை முதல் திறக்கப்பட்டு மணல் அள்ள அனுமதிக்கப்பட்டு வருகின்றது.
கொள்ளிடம் ஆற்றிலும் மணல் ரீச் திறக்கப்படுமா ?
இதுகுறித்து மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஜி.கே.ராமர் கூறியது:
மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று மணல் ரீச் திறக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் வரும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதால் காவிரி ஆற்றில் தற்போது திறந்துள்ள ரீச் மீண்டும் மூடப்படும். இதனால் தொழிலாளர்கள் மீண்டும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, பொதுப்பணித்துறையினர் அமைதி பேச்சு வார்த்தையின் போது ஏற்றுக்கொண்டபடி, கொள்ளிடம் ஆற்றில் மாதவ பெருமாள்கோவில், கூகூர், லால்குடி ஆகிய இடங்களில் மணல் மாட்டு வண்டி ரீச் திறக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.